மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 23 ஆகஸ்ட், 2014

பஹாமனி ஆட்சி 2



1436 லிருந்து 1458 வரை இரண்டாம் அஹ்மது ஷாவின் ஆட்சி நடைபெற்றது. இவர் ஒரு சிறந்த மன்னராக விளங்கியதோடல்லாமல் மகானாக புகழ் பெற்றார். வெளியிலிருந்து வந்தவர்களுக்கே தனது மந்திரிசபையில் இடமளித்தார். சங்க்மேஷ்வர் ராஜாவின் மகளை மணந்து அவருக்கு “ஸெபா செஹ்ரா” என்னும் பட்டம் சூட்டினார். இரண்டாம் அஹ்மது ஷாவின் பெயரில் வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தின் காலம் கண்டுபிடிக்க பட்டபின் முதலாம் அஹ்மது ஷா உயிருடன் இருக்கும் போதே இரண்டாம் அஹ்மது ஷா ஆட்சியில் இருந்ததாக அறியப் படுகிறது. இரண்டாம் அஹ்மது ஷா தனது காலில் பலமாக ஏற்பட்ட காயத்தின் காரணமாக இறந்தார். 1458 லிருந்து 1461 வரை அலாதீன் ஹுமாயுன் ஸாலிம் ஷா ஆட்சியிலிருந்தார். இவர் முந்தைய ஆட்சியாளரின் மூத்த மகனாவார். எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகவும், கடுமையானவராகவும் இருந்தார். தனது நெருங்கிய உறவினர் சிக்கந்தர் கானுக்கு அதிகாரம் வழங்க, அவர் புரட்சியில் ஈடுபட்டார். அவரை அலாதீன் ஹுமாயுன் ஸாலிம் ஷா நசுக்கிக் கொண்டார். 1461 ல் ஹுமாயுன் இறந்தார். இவருக்குப் பிறகு, இவர் மகன் மூன்றாம் அஹ்மது என்னும் நிஜாம் ஷா 1461 லிருந்து 1453 வரை பதவியில் இருந்தார். இவர் தனது எட்டாவது வயதில் ஆட்சிக்கு வந்தார். ஷா முஹிப்புல் லா மற்றும் சையதுஸ் ஸதாத் சையத் ஹனிஃப் ஆகியோரின் மேற்பார்வையில் ஆட்சி புரிந்தார். தோவகிர் ராணி மக்துமா இ ஜஹான் நர்கிஸ் பேகம் இவரின் ஆட்சிக்கு மையமாக இருந்து ஆண்டதாக சொல்லப்படுகிறது. மூன்றாம் அஹ்மதுவின் ஆட்சியில் அனைத்து அரசு கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். மூன்றாம் அஹ்மது திருமணநாள் அன்று மரணமடைந்தார். இவருக்குப் பிறகு, இளைய சகோதரர் ஷம்சுத்தின் மூன்றாவது முஹம்மது ஷா ஆட்சிக்கு வந்தார். 1463 லிருந்து 1482 வரை ஆண்டார். மூன்றாவது முஹம்மது ஷா 14 வயதில் திருமணம் செய்து கொண்டார். தோவகிர் ராணியும் அதிகாரவர்கத்திலிருந்து விலகிக் கொண்டார். மலிக் உத் துஜ்ஜார் மஹ்முத் கவான் பிரதம மந்திரியாக அமர்த்தப்பட்டார். இவர் பஹாமனி ஆட்சியை சரித்திரத்தில் இடம் பெற பல நன்மைகள் செய்தார். இவர் காலத்தில் பரேண்டா கோட்டை, பிதாரின் புகழ்பெற்ற கல்லூரி மற்றும் பிதாரின் மதரஸா ஆகியவை குறிபிடத்தக்கவை. கோவா மற்றும் ஒரிஸ்ஸாவின் கபிலேஸ்வர் வெற்றி கொள்ளப்பட்டது. தோவகிர் ராணி 1470 ல் இறந்தார். பஹாமனிகளின் எல்லை வங்காள விரிகுடா வரை கிழக்கிலும், அரபிக்கடல் வரை மேற்கிலும் பரவியது. மஹ்முத் கவான் தான் முதல்முதலாக எல்லைகளையும், நிலங்களையும் அளந்து அதற்கேற்றார்போல் நகரங்களிலும், கிராமங்களிலும் வரி வசூலிக்கச் செய்தார். பஹாமனிகளின் தெற்கு எல்லையாக காஞ்சிபுரம் வரை பரவியது. ஒரிஸ்ஸாவின் புருஷோத்தமுக்கும், தனக்கும் டெக்கானை பிரிப்பது தொடர்பாக போலி பத்திரம் உண்டாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, மஹ்முத் கவான் 73 வது வயதில் மன்னரால் மரணதண்டனை கொடுக்கப்பட்டார். பின்னாளில் மஹ்முத் கவான் நேர்மையானவர் என்பதை அறிந்து, அவர் மகனுக்கு மூன்றாவது முஹம்மது ஷா பதவிகள் வழங்கினார்.
                                             மூன்றாவது முஹம்மது ஷாவிற்குப் பிறகு, மகன் நான்காவது முஹம்மது ஷா 1482 லிருந்து 1518 வரை ஆட்சியிலிருந்தார். இவர் 12 வயதில் ஆட்சிக்கு வந்தார். புதிய நடைமுறையாக ராணி அதிபராக இருந்தார். இவர் எந்தநேரமும் மது, மாது மற்றும் ஆடல் பாடல்கள் கேளிக்கைகளிலேயே மூழ்கியிருந்தார். இவரின் ஆட்சியின் போது தான் அஹமது நகர் உருவாகியது. இவருக்குப் பிறகு, மகன் 1518 லிருந்து 1520 வரை ஆண்டார். சுல்தானேட் ஐந்து பகுதிகளாக அஹமதுநகர், பிரார், பிதார், பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா என பிரிந்தது. அனைத்தும் சேர்ந்து டெக்கான் சுல்தானேட் என்று அழைக்கப்பட்டது. இவருக்குப் பிறகு, மகன் அலாத்தின் ஷா 1520 லிருந்து 1523 வரை ஆட்சியிலிருந்தார். இவர் மிகவும் நல்லவராக இருந்தார். பதவிக்கு ஆசைப்பட்ட அமீர் பரீத் என்பவர் மன்னர் மீது பழி சுமத்தி கொன்றார். இவருக்குப் பின் மஹ்முத் ஷாவின் மகன் வலி அல்லாஹ் ஷா 1523 லிருந்து 1526 வரை ஆட்சி செய்தார். அமீர் பரீதே இவரை பதவியில் அமர்த்தினார். இவரை அரண்மனையின் பெண்களுடன் உணவு மற்றும் உடைகள் கொடுத்து கைதியாகவே வைத்திருந்தார். அமீர் பரீத் அஹமது ஷாவின் 23 வயதான விதவை மனைவி பீபி சித்தி என்பவரை மணந்து கொண்டார். நாளடைவில் ராணியுடனும் கள்ளத்தொடர்பு கொள்ள ஆரம்பித்தார். இதை மன்னர் எதிர்க்க விஷம் வைத்து கொல்லப்பட்டார். 1526 முதல் 1527 வரை கலிமுல்லாஹ் ஷா ஆட்சி செய்தார். கலிமுல்லாவின் மகன் மஹ்மூத் ஷா தான் கடைசி பஹாமனிகளின் மன்னர். இவரை அமீர் பரீத் தன் கைப்பாவையாக வைத்திருந்தார். அந்த நேரத்தில் தான் புதிய புயலாக ஜஹீருத்தீன் முஹம்மது பாபர் இந்தியாவுக்குள் நுழைந்தார். அனைத்து டெக்கான் ஆட்சியாளர்களும் புதிய மொகலாய மன்னருக்கு அடிபணிந்தனர். கலீமுல்லாஹ் ஷா பாபருக்கு கடிதம் எழுதி தன்னை அமீர் பரீதிடமிருந்து விடுவிக்க வேண்டினார். இந்த தகவல் வெளியாகி விட கலிமுல்லாஹ் உயிருக்கு பயந்து 1527 ல் பிஜப்பூர் சென்றார். அங்கு சரியான வரவேற்பில்லாததால் அஹ்மத்நகர் சென்றார். அங்கு சுல்தானேட் ஆட்களால் பிடித்துக் கொல்லப்பட்டார். அவரின் உடல் பிதாருக்கு கொண்டு வரப்பட்டது. இவருக்குப் பிறகு, இவர் மகன் இல்ஹமுல்லாஹ் மக்காவுக்கு சென்றார். அவர் திரும்பவே இல்லை. இப்படியாக 200 ஆண்டுகளாக ஆண்ட பஹாமனி ஆட்சி முடிவுக்கு வந்தது. இவர்களின் ஆட்சியில் தர்கா வழிபாடு மேலோங்கி இருந்தது. இறைவன் தந்த அருட்கொடையாம் அரசாட்சியை போட்டி, பொறாமை, மது, மாது, கொலைகள் என்று தவறாக பயன்படுத்தி இழந்தவர்கள்.

கருத்துகள் இல்லை: